உலகின் மிகப் பழைய காவியமாக இராமயணம் உள்ளது. இந்தியா,தாய்லாந்து, நேபால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா….. இப்படியாக ஆசியாவின் பல நாடுகளிலும் அன்று முதல் இன்று வரை சொல்லப்பட்டு, கேட்கப்பட்டு, பாடப் பட்டு, நாடகமாக நடிக்கப்பட்டு வரும் காவியமாக, உலக வரலாற்றில் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் உயிரோட்டமுள்ள காவியமாக இராமாயணம் உள்ளது.
இந்த இராமாயணம் ஒரு புனைவா அல்லது நடந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதப் பட்டதா?
இதை ஆராயப் போனாலே உடனே “ஏய் , நிறுத்து, நிறுத்து” என்று குரல்கள் பல தரப்பிடம் இருந்தும் வருகிறது.
பரிவார அமைப்புகள் என்று சொல்லப்படு அமைப்புகளில் உள்ள பல இயக்கங்களும், அவற்றில் உள்ள பலரும் இராமர் பேரை வைத்து தங்கள் முன்னேற்றத்துக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டார்கள். இன்னமும் இராமரை வைத்து பதவிகள் அடையலாம், பேர் எடுக்கலாம், சொத்து சேர்க்கலாம் என்கிற நம்பிக்கை பலருக்கு உண்டு. எனவே இராமயணத்தை ஆராயப் போனால் அவர்களுக்கு முதலுக்கே மோசம் போனது போல ஆகி விடும்.
வில்லை வளைத்ததாக சொல்லப்படும் இராமரை எப்படி எல்லாம் தங்களுக்கு வசதியாக வளைக்க முடியுமோ அப்படி வளைக்கப் பார்ப்பார்கள். இராமர் விட்டுக் கொடுக்கும் கொள்கை உடையவர், மற்றவர் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் அனுபவிப்பதுதான் அவரது கொள்கை , அப்பாவிகளை நோக செய்து தனக்கு எதையும் தேடுவது அவரது கொள்கை அல்ல என்று சொன்னால், “என்னய்யா இந்த இராமர்” என்று எரிச்சல் பட்டு, கிருஷ்ணர்தான் முக்கியமானவர் என்று சொல்வதையும் நாம் காண்கிறோம்.
இவர்களின் சத்தத்தைப் போலவே இன்னொரு சத்தம் “ஏய் நிறுத்து, இராமர் எல்லாம் சும்மா, அதெல்லாம் நடக்கவே இல்லை”‘ என்றும் கேட்கிறது. கடவுள் இருக்கிறார் என்று சொல்லி பலர் பில்லியன்களைக் குவிப்பதைப் போலக் கடவுள் இல்லை என்று சொல்லி பல நூறு கோடிகளை சேர்த்தவர்களையும் மக்கள் பார்க்கிறார்கள். இராமரைப் பாராட்டினால் அதை ரசிக்க பலர் இருப்பது போல, இராமரை குறை சொன்னால், திட்டினால் அதை ரசிக்க ஆள் இல்லாமலா போகும், அதை வைத்து கல்லா கட்டலாம்.
”இராமாயணம் என்பது ஒரு புனைவே, அப்படி நடக்கவில்லை. அது ஒரு கதை புத்தகம் , புரியுதா அது கற்பனை, ஆனால் இந்த இராமன் குடிகாரன், பொண்ணுங்களோட டான்ஸ் ஆடி ஜல்சா பண்ணக் கூடியவன், அவன் நல்லவன் இல்லை புரியுதா, இதை ஒத்துக்க. இராமாயணம்னு ஒன்னு நடக்கவே இல்லை, ஆனால் இராமன் இருந்திருக்கான், இராமாயணத்துல சொன்ன இராமன் குடிகாரன், ஆனால் இராமாயணம் உண்மையில் நடக்கவில்லை” – எப்படி இருக்கிறது இவர்களின் பகுத்தறிவு, பாருங்கள்.
“இந்த சீதை இருக்கிறாளே, அவளை இராவணன் தூக்கிக்கிட்டு போல, சீதையே இராவணன் கூட ஓடிப் போயிட்டா… ஹெ ஹ் ஹெ ஹே, இராமாயணம் உண்மையில் நடக்கவே இல்லை, ஆனால் இராமாயணத்துல சொன்ன சீதை இராவணன் மேல ஆசைப் பட்டு ஓடிப் போனதுக்கு நான் கேரண்டி” - இதுதான் இவர்களின் பகுத்தறிவு.
பெண்களை போகப் பொருளாக நினைப்பவர்கள், பெண்களும் உயிருள்ள சிந்தனையுள்ள மனிதர்கள் என்பதை மறந்து பெண்கள் தாங்கள் ரசிப்பதற்காக இருப்பதாக நினைப்பவர்கள், தங்களின் நன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் வாழ்க்கையை பற்றி எண்ணாதவர்கள்… இப்படிப் பட்ட பண்பாட்டை உடையவர்களுக்கு, காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல, பெண்கள் என்றாலே இளக்காரம் தான் போகப் பொருள்தான்.
கல்லூரியிலும், அலுவலகத்திலும் சிலரைக் காண்கிறோம், பெண்கள் யாரிடமாவது சிரித்துப் பேசி விட்டால் போதும், இவர்களுக்குள் பூகம்பமே வெடித்து விடும். “அவன் கிட்ட மட்டும் சிரிச்சு பேசறா பாரு, அவன் பணக்காரன், பசையுள்ள பார்ட்டி …. ஒட்டிக்கிச்சு…” என்று இவர்களே அளக்க ஆரம்பிப்பார்கள்.
பெண்களின் ஒழுக்கத்தைக் குறை சொல்லி அவர்களை கெட்ட நடத்தை உள்ளவர்களாக சித்தரிப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி. இவர்கள் பேனாவிலே சீதை சிக்கினால்…. இராமாயணத்திலும் தங்களின் “மகிழ்ச்சிக்கு” ஏற்றபடியே சித்தரிப்பார்கள்.
மூன்றாவது “நிறுத்து, நிறுத்து” சத்தம் மத சகிப்புத்தன்மையை இழந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து வருகிறது. இவர்களுக்கு உலகிலே தங்களின் மதம் மட்டுமே இருக்கும் படி செய்ய வேண்டும் என்று அப்படி ஒரு உந்துதல்.
இராமர் பெரும்பாலான இந்துக்களாலே கடவுளாக கருதப்படுபவர் என்பதால், எப்படியாவது இராமாயணம் நடக்கவில்லை என்று சத்தமாக அழுத்தி சொல்லி விட்டால், இந்து மதத்திற்கு ப்யூசை புடுங்கி விட்டது போல ஆகும், அப்புறம் நாம துள்ளி விளையாடலாம் என்று, கொஞ்ச நேரத்துக்கு சீதையை இராமரை திட்டுபவர்களுடன் சேர்ந்து கை தட்டி, இராமாயணமே நடக்கவில்லை, ஆனாலும் இராமன் கெட்டவன் என்று சொல்லி மகிழ்வார்கள். ஏனெனில் நாளைக்கு இராமாயணம் நடந்த நிகழ்வு என்று ஆகி விட்டால், அதற்காக முன்னெச்சரிக்கையாக இராமனைக் கெட்டவன் என்று திட்டி வைப்போம் என்று காண்டிராக்டிலே ஒரு Clause சேர்ப்பது போல சேர்ர்த்து வைப்பார்கள்.
இப்படியாக ஒவ்வொருவரும் ஏற்கெனவே ஒரு நிலைப் பாட்டை எடுத்துக் கொண்டு அதை எப்படியாவது உண்மை போலக் காட்டி சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார்களே அல்லாமல் , உண்மையில் ஆராய்ச்சிக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
இவர்களை எல்லாம் தாண்டி சென்று நாம் ஆராய்வோம்.
(தொடரும்

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !