நட்சத்திர ரகசியங்கள் - nelliadynet
Headlines News :
Home » » நட்சத்திர ரகசியங்கள்

நட்சத்திர ரகசியங்கள்

Written By www.kovilnet.com on Tuesday, January 20, 2015 | 12:28 AM

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1

Picture shows Libra (Tula Rasi) constellations
நட்சத்திர அதிசயங்கள்
வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கும் விசாகம் ஒரு அபூர்வமான அதிசய நட்சத்திரம்! எல்லை இல்லாத அதன் பெருமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்!

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1
ச.நாகராஜன்
விசாகம் என்றால் புதிய பிரிவு

மனித குலத்திற்கே முக்கியமான நட்சத்திரமாகத் திகழும் விசாக நட்சத்திரம் பல அதிசயங்களையும் அபூர்வ உண்மைகளையும் நம்மை அறியச் செய்து பரவசமூட்டும் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது.இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம். விசாகம் என்ற சொல்லை வி+ சாகம் என்று இரண்டாகப் பிரித்துப் பொருளைக் கொள்ள வேண்டும். ‘வி’ என்றால் புதிய அல்லது வேறு என்று பொருள் ஆகும். ‘சாகம்’ என்றால் பிரிவு அல்லது கிளை என்று பொருள் ஆகும். ஆக விசாகம் என்றால் புதிய பிரிவு என்று பொருள்.

வானத்தை நம் முன்னோர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி வான கோளத்தில் தென் கோளப் பகுதி வட கோளப் பகுதி  என இரண்டு கோளப் பகுதிகள் உள்ளன.வடக்கு மண்டலம் அல்லது கோளத்தைப் பிரிக்கும் நட்சத்திரமாக விசாகம் அமைகிறது. அதாவது புதிய பிரிவின் ஆரம்ப நட்சத்திரம் அது! இந்த ஆரம்பத்தைப் பிரிக்கும் ராசியாக துலா ராசி அமைகிறது.மேஷம், ரிஷபம், மிதுனம்,
கடகம்,சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிகளும் ஒரு பகுதியாக இருக்க துலாத்திலிருந்து அடுத்த மண்டலம் ஆரம்பிக்கிறது!


இன்னொரு முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாக நட்சத்திரம் வட்ட வடிவமாக தராசு போல உள்ள ஒரு நட்சத்திரம் என்பது இன்னொரு வியப்பூட்டும் சுவையான செய்தி!

ஆக வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பது விசாகம். இரவும் பகலையும் சமமாகப் பிரிப்பதும் விசாகம். கோடை காலம் குளிர்காலம் என பருவத்தை இரண்டாகப் பிரிப்பதும் விசாகம். இத்தனை விஷயங்களை சமன் செய்யும் இது இருக்கும் ராசி துலா ராசி என்பது பொருத்தம் தானே! நம் முன்னோர்களின் அறிவியல், ஆன்மீக, வானவியல், ஜோதிட அறிவை எண்ணி வியந்து வியந்து பிரமிக்கலாம்!
தென் மண்டலத்தை உருவாக்கிய விஸ்வாமித்திரர் 
பொய்யே உரைக்காத வால்மீகி முனிவர் ராமாயணத்தில் பால காண்டத்தில் 60ம் ஸர்க்கத்தில் விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காகப்  படைத்த தென் மண்டலத்தைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறார். வானில் சென்ற திரிசங்குவை இந்திரன் தடுக்க அவன் ‘த்ராஹி த்ராஹி’ (காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்) என்று விஸ்வாமித்திரரிடம் அபயம் கேட்டுக் கீழே விழ விஸ்வாமித்ரர் திஷ்ட திஷ்ட (இரு இரு) என்று சொல்லி அவனை நிறுத்தி ஒரு புதிய மண்டலத்தையே ச்ருஷ்டிக்கிறார்.

ச்ருஜன் தக்ஷ¢ண மார்கஸ்தான் சப்தரிஷீன் அபரான் புன: I                         நக்ஷத்ர வம்சபரம்பரம் அச்ருஜத் க்ரோத மூர்ச்சித: II (பால காண்டம் 60ம் ஸர்க்கம்,ஸ்லோகம் 20)
“பிராஜாபதியைப் போலவே விஸ்வாமித்ரர் தெற்கில் சப்தரிஷி மண்டலத்தை உருவாக்கினார். அதே போல தெற்கில் வடக்கில் இருப்பது போல நட்சத்திரங்களையும் உருவாக்கினார்.”

வானத்தில் தேவ பாகத்திலும் அசுர பாகத்திலும் உள்ள நட்சத்திரங்களை ஒப்பு நோக்கினால் நாம் வியப்பை அடைவோம். வடக்கே உள்ள (சௌம்ய) துருவ நட்சத்திரம் போல தெற்கே யம துருவம் உள்ளது. மயில் வடிவம் போல உள்ள சப்தரிஷி மண்டலம் வட பாகத்தில் இருக்கும் போது மயூர மண்டலம் என்ற சப்தரிஷி மண்டலம் தெற்கே உள்ளது. மான் தலை உள்ள ஓரியன் வடக்கில் உள்ள போது அதே மான் தலை போல உள்ள நட்சத்திரம் உடைய மகரம் தென் மண்டலத்தில் உள்ளது.ஆருத்ரா வடக்கில் இருப்பது போல விசாகம் தெற்கில் உள்ளது. வடக்கின் ரோஹிணி போல தெற்கில் ஜேஷ்டா (கேட்டை) உள்ளது. வடக்கில் உள்ளஅஸ்வினி இரட்டையர் போல இரட்டையரான விசித்ரதுவை தெற்கில் காணலாம்.

ஆக இப்படி மிக முக்கியமான பிரிவைச் சுட்டிக் காட்டும் ஒரு நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது!

-விசாக நட்சத்திர அதிசயம் தொடரும்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

நட்சத்திர அதிசயங்கள்
 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!
நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2
ச.நாகராஜன்

மஹாபாரதக் கதையின் உட்பொருள்
மஹாபாரதம் “ரோஹிணி சில காலம் அனைவரின் பார்வையிலிருந்து மறைந்து மீண்டும் தன் பழைய இடத்தில் தோன்றினாள்” என்று கூறுவதன் பொருள் என்ன?
ப்ரஜாபதி ரோஹிணி நட்சத்திரத்தின் அதி தேவதை.அத்தோடு ரிஷிகள் செய்யும் யாகங்களுக்கும் அதிகாரி!தேவர்களின் நாளும் மனிதர்களின் நாளும் வேறு வேறு. தேவர்களின் இரவு நேரத்திற்கு அதிபதி ப்ரஜாபதி தான்.இரவு நேரத்தில் இருக்கின்ற ஒரே வெளிச்சம் சந்திரனின் வெளிச்சம். யாகத்திற்கு இந்த சந்திர ஒளி தேவையாக இருந்தது.ஆகவே தான் சந்திரனே ப்ரஜாபதி என்று கூறப்பட்டான்.
தைத்திரீய பிராமணம், “ப்ரஜாபதி சிந்தனையில் ஆழ்ந்தார்.அவர் தனது வயிறு காலி ஆவதை உணர்ந்தார். உடனடியாகத் தவத்தை மேற்கொண்டார்.எதையாவது படைக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.புதிய விராட்டை அதாவது அண்டத்தை சிருஷ்டித்தார்.தேவர்களையும் அசுரர்களையும் அழைத்து இந்தப் புதிய அமைப்பை ஏற்குமாறு வேண்டினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்” என்கிறது. அந்த விராட் தான் ரோஹிணி! ப்ரஜாபதியின் புதிய அமைப்பில் ரோஹிணிக்கு முதல் இடம் கிடைத்தது. அதாவது மேல் ஸ்தானம் கிடைத்தது.

இதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம். வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.
துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!

இப்படி வானவியல் கணிதம், வானச் சுழற்சி, புதிய அமைப்பை மனித குல நன்மைக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை பாமரனுக்கு எப்படி உணர்த்துவது?அறிஞர்களும் கூடத் திணறும் அற்புத கணிதம் இது. ஆகவே தான் இதை எளிமைப் படுத்தி இதிஹாஸங்களும் புராணங்களும் சுவையான கதையாக அனைத்தையும் விவரித்தன! புராணக் கதைகளை ஒரு சிறந்த வானவியல் நிபுணர் மட்டுமே அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

முதல் தர ஒளியுடைய நட்சத்திரம்
அல்டிபெரான் எனப்படும் ரோஹிணி 65 ஒளி வருட தூரத்தில் உள்ளது.106 மாக்னியூட்டில் அமைந்துள்ள முதல் தர நட்சத்திரமாகும் இது! சகட அமைப்பில் இதைக் காணலாம் என அறிவியல் கூறுகிறது. ஆக விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை தங்கள் தங்கள் வழியில் விரிவாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது!

சிவந்த மணி பெற்ற நீல ரத்னம்!
ரோஹிணி நட்சத்திரத்தின் பெருமை எல்லையற்றது.பல் வேறு மொழிகளில் ஏராளமானவர்கள் அதைப் புகழ்ந்து பாடல்களை எழுதியுள்ளனர்.ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம். ரோஹிணி நட்சத்திரத்தை கண்ணன் தன் பிறப்புக்காகத் தேர்ந்தெடுத்ததை உலகம் நன்கு அறியும்.அதனால் ரோஹிணியின் பெருமை உச்சத்திற்குச் சென்று விட்டது. ரோஹிணியையும் சுவாதி நட்சத்திரத்தையும் பில்வமங்களர் க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்கிறார்.
க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 65வது பாடலாக அமைந்துள்ள இப்பாடலை ராமகிருஷ்ண மடம் அண்ணாவின் பதம் பிரித்துத் தந்துள்ள அர்த்தத்துடன் பார்ப்போம்:

ஸ்வாதீ ஸபத்னீ கிலதாரகாணாம் முக்தாபலானாம் ஜனனீதி ரோஷாத் I               ஸா ரோஹிணீ நீல-மஸூத ரத்னம் க்ருதாஸ்பதம்    கோபவதூ குசேஷ¤ II
தாரகாணாம் – நட்சத்திரங்களின்                                              ஸபத்னீ – சக்களத்தியாகிய                                                   ஸ்வாதீ – ஸ்வாதீ என்பவள்                                            முக்தாபலானாம் – முத்துக்களுக்கு                                               ஜனனீ கில இதி – தாயாகி விட்டாள் அல்லவா என்ற                           ரோஷாத் – கோபத்தால்                                                        ஸா ரோஹிணீ – நட்சத்திரங்களில் ஒருத்தியாகிய அந்த ரோஹிணீ                 கோபவதூ குசேஷ¤ – இடைப் பெண்களின் மார்பகங்களின் மத்தியில்                      க்ருத ஆஸ்பதம் – இடம் பெற்று விளங்கும்                                       நீலம் ரத்னம் – கிருஷ்ணனாகிற நீல ரத்னத்தை                                   அஸூத – பெற்றாள்

ஸ்வாதி நட்சத்திரம் தோன்றும் போது விழும் மழைத்துளிகளைத் தம்முள் ஏந்தி சிப்பிகள் முத்தை உருவாக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி ஸ்வாதிக்கு போட்டியாக நீல ரத்னத்தை ரோஹிணீ பெற்றுப் பெருமை அடைந்தாள் என்று கூறும் இந்தச் செய்யுள் மிகச் சுவையானது; ஆழ்ந்த பொருளைக் கொண்டது!
நீல ரத்னத்தைப் பெற்ற சிவந்த மணியான ரோஹிணியைப் போற்றி வணங்குவோம்!
************

நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1

நட்சத்திர அதிசயங்கள்
வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1

எழுதியவர்: ச.நாகராஜன்
அதி ரஹஸ்ய அஸ்வினி
இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.
அயோதௌம்யரின் கட்டளை
அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.
அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.
உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.
அஸ்வினி தேவர்களை நோக்கி துதி
கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.
ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.
மீண்டும் கண்பார்வை கிடைத்தது
எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.
உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.
குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்

*****************
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template